திருஞானசம்பந்தர் தேவாரம் |
மூன்றாம் திருமுறை |
3.9 திருவீழிமிழலை பண் - காந்தாரபஞ்சமம் |
கேள்வியர் நாடொறும் ஓதும்நல் வேதத்தர் கேடிலா
வேள்விசெய் அந்தணர் வேதியர் வீழிமி ழலையார்
வாழியர் தோற்றமுங் கேடும்வைப் பாருயிர் கட்கெலாம்
ஆரியர் தம்மடி போற்றியென் பார்கட்க ணியரே.
|
1 |
கல்லின்நற் பாவையோர் பாகத்தர் காதலித் தேத்திய
மெல்லினத் தார்பக்கல் மேவினர் வீழிமி ழலையார்
நல்லினத் தார்செய்த வேள்விசெ குத்தெழு ஞாயிற்றின்
பல்லனைத் துந்தகர்த் தாரடி யார்பாவ நாசரே.
|
2 |
நஞ்சினை யுண்டிருள் கண்டர்பண் டந்தக னைச்செற்ற
வெஞ்சின மூவிலைச் சூலத்தர் வீழிமி ழலையார்
அஞ்சனக் கண்ணுமை பங்கினர் கங்கையங் காடிய
மஞ்சனச் செஞ்சடை யாரென வல்வினை மாயுமே.
|
3 |
கலையிலங் கும்மழு கட்டங்கம் கண்டிகை குண்டலம்
விலையிலங் கும்மணி மாடத்தர் வீழிமி ழலையார்
தலையிலங் கும்பிறை தாழ்வடஞ் சூலந் தமருகம்
அலையிலங் கும்புன லேற்றவர்க் கும்மடி யார்க்குமே.
|
4 |
பிறையுறு செஞ்சடை யர்விடை யார்பிச்சை நச்சியே
வெறியுறு நாட்பலி தேர்ந்துழல் வீழிமி ழலையார்
முறைமுறை யாலிசை பாடுவா ராடிமுன் தொண்டர்கள்
இறையுறை வாஞ்சியம் அல்லதெப் போதுமென் உள்ளமே.
|
5 |
வசையறு மாதவங் கண்டுவ ரிசிலை வேடனாய்
விசையனுக் கன்றருள் செய்தவர் வீழிமி ழலையார்
இசைவர விட்டியல் கேட்பித்துக் கல்லவ டமிட்டுத்
திசைதொழு தாடியும் பாடுவார் சிந்தையுட் சேர்வரே.
|
6 |
சேடர்விண் ணோர்கட்குத் தேவர்நன் மூவிரு தொன்னூலர்
வீடர்முத் தீயர்நால் வேதத்தர் வீழிமி ழலையார்
காடரங் காவுமை காணஅண் டத்திமை யோர்தொழ
நாடக மாடியை யேத்தவல் லார்வினை நாசமே.
|
7 |
எடுத்தவன் மாமலைக் கீழவி ராவணன் வீழ்தர
விடுத்தருள் செய்திசை கேட்டவர் வீழிமி ழலையார்
படுத்துவெங் காலனைப் பால்வழி பாடுசெய் பாலற்குக்
கொடுத்தனர் இன்பங் கொடுப்பர் தொழக்குறை வில்லையே.
|
8 |
திக்கமர் நான்முகன் மாலண்டம் மண்டலந் தேடிட
மிக்கவர் தீத்திர ளாயவர் வீழிமி ழலையார்
சொக்கம தாடியும் பாடியும் பாரிடஞ் சூழ்தரும்
நக்கர்தந் நாமந மச்சிவா யவ்வென்பார் நல்லரே.
|
9 |
துற்றரை யார்துவ ராடையார் துப்புர வொன்றிலா
வெற்றரை யார்அறி யாநெறி வீழிமி ழலையார்
சொற்றெரி யாப்பொருள் சோதிக்கப் பால்நின்ற சோதிதான்
மற்றறி யாவடி யார்கள்தஞ் சிந்தையுள் மன்னுமே.
|
10 |
வேதியர் கைதொழு வீழிமி ழலைவி ரும்பிய
ஆதியை வாழ்பொழில் காழியுள் ஞானசம் பந்தனாய்ந்
தோதிய ஒண்டமிழ் பத்திவை யுற்றுரை செய்பவர்
மாதியல் பங்கன் மலரடி சேரவும் வல்லரே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |
திருஞானசம்பந்தர் தேவாரம் |
மூன்றாம் திருமுறை |
3.80 திருவீழிமிழலை - திருவிராகம் பண் - சாதாரி |
சீர்மருவு தேசினொடு தேசமலி செல்வமறை யோர்கள்பணியத்
தார்மருவு கொன்றையணி தாழ்சடையி னானமர்ச யங்கொள்பதிதான்
பார்மருவு பங்கயமு யர்ந்தவயல் சூழ்பழன நீடஅருகே
கார்மருவு வெண்கனக மாளிகை கவின்பெருகு வீழிநகரே.
|
1 |
பட்டமுழ விட்டபணி லத்தினொடு பன்மறைகள் ஓதுபணிநற்
சிட்டர்கள் சயத்துதிகள் செய்யவருள் செய்தழல்கொள் மேனியவனூர்
மட்டுலவு செங்கமல வேலிவயல் செந்நெல்வளர் மன்னுபொழில்வாய்
விட்டுலவு தென்றல்விரை நாறுபதி வேதியர்கள் வீழிநகரே.
|
2 |
மண்ணிழி சுரர்க்குவளம் மிக்கபதி மற்றுமுள மன்னுயிர்களுக்
கெண்ணிழிவில் இன்பநிகழ் வெய்தஎழி லார்பொழில் இலங்கறுபதம்
பண்ணிழிவி லாதவகை பாடமட மஞ்ஞைநட மாடஅழகார்
விண்ணிழி விமானமுடை விண்ணவர் பிரான்மருவுவீழிநகரே.
|
3 |
செந்தமிழர் தெய்வமறை நாவர்செழு நன்கலை தெரிந்தவவரோ
டந்தமில் குணத்தவர்கள் அர்ச்சனைகள் செய்யஅமர் கின்றஅரனூர்
கொந்தலர் பொழிற்பழன வேலிகுளிர் தண்புனல் வளம்பெருகவே
வெந்திறல் விளங்கிவளர் வேதியர் விரும்புபதி வீழிநகரே.
|
4 |
பூதபதி யாகிய புராணமுனி புண்ணியநன் மாதைமருவிப்
பேதமதி லாதவகை பாகமிக வைத்தபெரு மானதிடமாம்
மாதவர்கள் அன்னமறை யாளர்கள் வளர்த்தமலி வேள்வியதனால்
ஏதமதி லாதவகை இன்பம்அமர் கின்றஎழில் வீழிநகரே.
|
5 |
மண்ணின்மறை யோர்மருவு வைதிகமும் மாதவமும் மற்றுமுலகத்
தெண்ணில்பொரு ளாயவை படைத்தஇமை யோர்கள்பெரு மானதிடமாம்
நண்ணிவரு நாவலர்கள் நாடொறும் வளர்க்கநிகழ் கின்றபுகழ்சேர்
விண்ணுலவு மாளிகை நெருங்கிவளர் நீள்புரிசை வீழிநகரே.
|
6 |
மந்திரநன் மாமறையி னோடுவளர் வேள்விமிசை மிக்கபுகைபோய்
அந்தர விசும்பணவி அற்புத மெனப்படரும் ஆழியிருள்வாய்
மந்தரம்நன் மாளிகை நிலாவுமணி நீடுகதிர் விட்டஒளிபோய்
வெந்தழல் விளக்கென விரும்பினர் திருந்துபதி வீழிநகரே.
|
7 |
ஆனவலி யிற்றசமு கன்றலைய ரங்கவணி யாழிவிரலால்
ஊனமரு யர்ந்தகுரு திப்புனலில் வீழ்தரவு ணர்ந்தபரனூர்
தேனமர் திருந்துபொழில் செங்கனக மாளிகை திகழ்ந்தமதிலோ
டானதிரு உற்றுவளர் அந்தணர் நிறைந்தஅணி வீழிநகரே.
|
8 |
ஏனவுரு வாகிமண் இடந்தஇமை யோனுமெழி லன்னவுருவம்
ஆனவனும் ஆதியினொ டந்தமறி யாதஅழல் மேனியவனூர்
வானணவும் மாமதிள் மருங்கலர் நெருங்கிய வளங்கொள்பொழில்வாய்
வேனலமர் வெய்திட விளங்கொளியின் மிக்கபுகழ் வீழிநகரே.
|
9 |
குண்டமண ராகியொரு கோலமிகு பீலியொடு குண்டிகைபிடித்
தெண்டிசையு மில்லதொரு தெய்வமுள தென்பரது வென்னபொருளாம்
பண்டையய னன்னவர்கள் பாவனை விரும்புபரன் மேவுபதிசீர்
வெண்டரள வாள்நகைநன் மாதர்கள் விளங்குமெழில் வீழிநகரே.
|
10 |
மத்தமலி கொன்றைவளர் வார்சடையில் வைத்தபரன் வீழிநகர்சேர்
வித்தகனை வெங்குருவில் வேதியன் விரும்புதமிழ் மாலைகள்வலார்
சித்திர விமானம்அமர் செல்வமலி கின்றசிவ லோகமருவி
அத்தகு குணத்தவர்க ளாகியனு போகமொடி யோகவரதே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |
திருஞானசம்பந்தர் தேவாரம் |
மூன்றாம் திருமுறை |
3.85 திருவீழிமிழலை - திருவிராகம் பண் - சாதாரி |
மட்டொளி விரிதரு மலர்நிறை சுரிகுழல் மடவரல்
பட்டொளி மணியல்குல் உமையமை யுருவொரு பாகமாக்
கட்டொளிர் புனலொடு கடியர வுடனுறை முடிமிசை
விட்டொளி யுதிர்பிதிர் மதியவர் பதிவிழி மிழலையே.
|
1 |
எண்ணிற வரிவளை நெறிகுழல் எழில்மொழி யிளமுலைப்
பெண்ணுறும் உடலினர் பெருகிய கடல்விட மிடறினர்
கண்ணுறு நுதலினர் கடியதொர் விடையினர் கனலினர்
விண்ணுறு பிறையணி சடையினர் பதிவிழி மிழலையே.
|
2 |
மைத்தகு மதர்விழி மலைமகள் உருவொரு பாகமா
வைத்தவர் மதகரி யுரிவைசெய் தவர்தமை மருவினார்
தெத்தென இசைமுரல் சரிதையர் திகழ்தரும் அரவினர்
வித்தக நகுதலை யுடையவர் இடம்விழி மிழலையே.
|
3 |
செவ்வழ லெனநனி பெருகிய வுருவினர் செறிதரு
கவ்வழல் அரவினர் கதிர்முதிர் மழுவினர் தொழுவிலா
முவ்வழல் நிசிசரர் விறலவை யழிதர முதுமதிள்
வெவ்வழல் கொளநனி முனிபவர் பதிவிழி மிழலையே.
|
4 |
பைங்கண தொருபெரு மழலைவெ ளேற்றினர் பலியெனா
எங்கணு முழிதர்வர் இமையவர் தொழுதெழும் இயல்பினர்
அங்கணர் அமரர்கள் அடியிணை தொழுதெழ ஆரமா
வெங்கண அரவினர் உறைதரு பதிவிழி மிழலையே.
|
5 |
பொன்னன புரிதரு சடையினர் பொடியணி வடிவினர்
உன்னினர் வினையவை களைதலை மருவிய ஒருவனார்
தென்னென விசைமுரல் சரிதையர் திகழ்தரு மார்பினில்
மின்னென மிளிர்வதொர் அரவினர் பதிவிழி மிழலையே.
|
6 |
அக்கினொ டரவரை யணிதிகழ் ஒளியதொ ராமைபூண்
டிக்குக மலிதலை கலனென இடுபலி யேகுவர்
கொக்கரை குழல்முழ விழவொடு மிசைவதொர் சரிதையர்
மிக்கவர் உறைவது விரைகமழ் பொழில்விழி மிழலையே.
|
7 |
பாதமொர் விரலுற மலையடர் பலதலை நெரிதரப்
பூதமொ டடியவர் புனைகழல் தொழுதெழு புகழினர்
ஓதமொ டொலிதிரை படுகடல் விடமுடை மிடறினர்
வேதமொ டுறுதொழின் மதியவர் பதிவிழி மிழலையே.
|
8 |
நீரணி மலர்மிசை உறைபவன் நிறைகடல் உறுதுயில்
நாரண னெனஇவர் இருவரும் நறுமல ரடிமுடி
ஓருணர் வினர்செல லுறலரு முரவினொ டொளிதிகழ்
வீரணர் உறைவது வெறிகமழ் பொழில்விழி மிழலையே.
|
9 |
இச்சைய ரினிதென இடுபலி படுதலை மகிழ்வதோர்
பிச்சையர் பெருமையை யிறைபொழு தறிவென வுணர்விலர்
மொச்சைய அமணரும் முடைபடு துகிலரும் அழிவதோர்
விச்சைய ருறைவது விரைகமழ் பொழில்விழி மிழலையே.
|
10 |
உன்னிய அருமறை யொலியினை முறைமிகு பாடல்செய்
இன்னிசை யவருறை யெழில்திகழ் பொழில்விழி மிழலையை
மன்னிய புகலியுள் ஞானசம் பந்தன வண்டமிழ்
சொன்னவர் துயரிலர் வியனுல குறுகதி பெருவரே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |
திருஞானசம்பந்தர் தேவாரம் |
மூன்றாம் திருமுறை |
3.98 திருவீழிமிழலை - திருமுக்கால் பண் - சாதாரி |
வெண்மதி தவழ்மதில் மிழலையு ளீர்சடை
ஒண்மதி அணியுடை யீரே
ஒண்மதி அணியுடை யீருமை உணர்பவர்
கண்மதி மிகுவது கடனே.
|
1 |
விதிவழி மறையவர் மிழலையு ளீர்நடம்
சதிவழி வருவதொர் சதிரே
சதிவழி வருவதொர் சதிருடை யீருமை
அதிகுணர் புகழ்வதும் அழகே.
|
2 |
விரைமலி பொழிலணி மிழலையு ளீரொரு
வரைமிசை உறைவதும் வலதே
வரைமிசை உறைவதொர் வலதுடை யீருமை
உரைசெயும் அவைமறை யொலியே.
|
3 |
விட்டெழில் பெறுபுகழ் மிழலையு ளீர்கையில்
இட்டெழில் பெறுகிற தெரியே
இட்டெழில் பெறுகிற தெரியுடை யீர்புரம்
அட்டது வரைசிலை யாலே.
|
4 |
வேணிகர் கண்ணியர் மிழலையு ளீர்நல
பானிகர் உருவுடை யீரே
பானிகர் உருவுடை யீரும துடனுமை
தான்மிக உறைவது தவமே.
|
5 |
விரைமலி பொழிலணி மிழலையு ளீர்சென்னி
நிரையுற அணிவது நெறியே
நிரையுற அணிவதோர் நெறியுடை யீரும
தரையுற அணிவன அரவே.
|
6 |
விசையுறு புனல்வயல் மிழலையு ளீர்அர
வசையுற அணிவுடை யீரே
அசையுற அணிவுடை யீருமை அறிபவர்
நசையுறு நாவினர் தாமே.
|
7 |
விலங்கலொண் மதிளணி மிழலையு ளீரன்றவ்
இலங்கைமன் இடர்கெடுத் தீரே
இலங்கைமன் இடர்கெடுத் தீருமை யேத்துவார்
புலன்களை முனிவது பொருளே.
|
8 |
வெற்பமர் பொழிலணி மிழலையு ளீருமை
அற்புதன் அயனறி யானே
அற்புதன் அயனறி யாவகை நின்றவன்
நற்பதம் அறிவது நயமே.
|
9 |
வித்தக மறையவர் மிழலையு ளீரன்று
புத்தரொ டமணழித் தீரே
புத்தரொ டமணழித் தீருமைப் போற்றுவார்
பத்திசெய் மனமுடை யவரே.
|
10 |
விண்பயில் பொழிலணி மிழலையு ஈசனைச்
சண்பையுள் ஞானசம் பந்தன்
சண்பையுள் ஞானசம் பந்தன தமிழிவை
ஒண்பொருள் உணர்வதும் உணர்வே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |
திருஞானசம்பந்தர் தேவாரம் |
மூன்றாம் திருமுறை |
3.111 திருவீழிமிழலை - ஈரடி பண் - பழம்பஞ்சுரம் |
வேலி னோர்தரு கண்ணி னாளுமை
பங்க னங்கணன் மிழலை மாநகர்
ஆல நீழலின் மேவி னானடிக்
கன்பர் துன்பிலரே.
|
1 |
விளங்கு நான்மறை வல்ல வேதியர்
மல்கு சீர்வளர் மிழலை யானடி
உளங்கொள் வார்தமை உளங்கொள் வார்வினை
ஒல்லை யாசறுமே.
|
2 |
விசையி னோடெழு பசையு நஞ்சினை
யசைவு செய்தவன் மிழலை மாநகர்
இசையு மீசனை நசையின் மேவினான்
மிசை செயாவினையே.
|
3 |
வென்றி சேர்கொடி மூடு மாமதிள்
மிழலை மாநகர் மேவி நாடொறும்
நின்ற ஆதிதன் அடிநி னைப்பவர்
துன்ப மொன்றிலரே.
|
4 |
போத கந்தனை யுரிசெய் தோன்புயல்
நேர்வ ரும்பொழில் மிழலை மாநகர்
ஆத ரஞ்செய்த அடிகள் பாதம
லாலொர் பற்றிலமே.
|
5 |
தக்கன் வேள்வியைச் சாடி னார்மணி
தொக்க மாளிகை மிழலை மேவிய
நக்க னாரடி தொழுவர் மேல்வினை
நாடொ றுங்கெடுமே.
|
6 |
போர ணாவுமுப் புரமெ ரித்தவன்
பொழில்கள் சூழ்தரு மிழலை மாநகர்ச்
சேரு மீசனைச் சிந்தை செய்பவர்
தீவி னைகெடுமே.
|
7 |
இரக்க மிற்றொழில் அரக்க னாருடல்
நெருக்க னான்மிகு மிழலை யானடி
சிரக்கொள் பூவென ஒருக்கி னார்புகழ்
பரக்கும் நீள்புவியே.
|
8 |
துன்று பூமகன் பன்றி யானவன்
ஒன்று மோர்கிலா மிழலை யானடி
சென்று பூம்புனல் நின்று தூவினார்
நன்று சேர்பவரே.
|
9 |
புத்தர் கைச்சமண் பித்தர் பொய்க்குவை
வைத்த வித்தகன் மிழலை மாநகர்
சித்தம் வைத்தவர் இத்த லத்தினுள்
மெய்த்த வத்தவரே.
|
10 |
சந்த மார்பொழில் மிழலை யீசனைச்
சண்பை ஞானசம் பந்தன் வாய்நவில்
பந்த மார்தமிழ் பத்தும் வல்லவர்
பத்த ராகுவரே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |
திருஞானசம்பந்தர் தேவாரம் |
மூன்றாம் திருமுறை |
3.116 திருவீழிமிழலை - திருஇயமகம் பண் - பழம்பஞ்சுரம் |
துன்று கொன்றைநஞ் சடையதே தூய கண்டம்நஞ் சடையதே
கன்றின் மானிடக் கையதே கல்லின் மானிடக் கையதே
என்று மேறுவ திடவமே என்னி டைப்பலி யிடவமே
நின்ற தும்மிழலை யுள்ளுமே நீரெனைச் சிறிதும் உள்ளுமே.
|
1 |
ஓதி வாயதும் மறைகளே உரைப்ப தும்பல மறைகளே
பாதி கொண்டதும் மாதையே பணிகின் றேன்மிகு மாதையே
காது சேர்கனங் குழையரே காத லார்கனங் குழையரே
வீதி வாய்மிகும் வேதியா மிழலை மேவிய வேதியா.
|
2 |
பாடு கின்றபண் டாரமே பத்த ரன்னபண் டாரமே
சூடு கின்றது மத்தமே தொழுத என்னையுள் மத்தமே
நீடு செய்வதுந் தக்கதே நின்ன ரைத்திகழ்ந் தக்கதே
நாடு சேர்மிழலை யூருமே நாகம் நஞ்சழலை யூருமே.
|
3 |
கட்டு கின்றகழல் நாகமே காய்ந்த தும்மதனன் ஆகமே
இட்ட மாவதிசை பாடலே யிசைந்த நூலினமர் பாடலே
கொட்டு வான்முழவம் வாணனே குலாய சீர்மிழலை வாணனே
நட்ட மாடுவது சந்தியே நானுய் தற்கிரவு சந்தியே.
|
4 |
ஓவி லாதிடுங் கரணமே யுன்னு மென்னுடைக் கரணமே
ஏவு சேர்வுநின் னாணையே யருளி நின்னபொற் றாணையே
பாவி யாதுரை மெய்யிலே பயின்ற நின்னடி மெய்யிலே
மேவி னான்விறற் கண்ணனே மிழலை மேயமுக் கண்ணனே.
|
5 |
வாய்ந்த மேனியெரி வண்ணமே மகிழ்ந்து பாடுவது வண்ணமே
காய்ந்து வீழ்ந்தவன் காலனே கடுந டஞ்செயுங் காலனே
போந்த தெம்மிடை யிரவிலே உம்மி டைக்கள்வ மிரவிலே
ஏய்ந்த தும்மிழலை யென்பதே விரும்பி யேயணிவ தென்பதே.
|
6 |
அப்பி யன்றகண் ணயனுமே அமரர் கோமகனு மயனுமே
ஒப்பி லின்றமரர் தருவதே ஒண்கை யாலமரர் தருவதே
மெய்ப்ப யின்றவ ரிருக்கையே மிழலை யூரும திருக்கையே
செப்பு மின்னெருது மேயுமே சேர்வுமக் கெருது மேயுமே.
|
7 |
தானவக் குலம் விளக்கியே தாரகைச் செல விளக்கியே
வான டர்த்தகயி லாயமே வந்து மேவுகயி லாயமே
தானெ டுத்தவல் லரக்கனே தடமு டித்திர ளரக்கனே
மேன டைச்செல விருப்பனே மிழலை நற்பதி விருப்பனே.
|
8 |
காய மிக்கதொரு பன்றியே கலந்த நின்னவுரு பன்றியே
ஏய விப்புவி மயங்கவே யிருவர் தாமன மயங்கவே
தூய மெய்த்திரள் அகண்டனே தோன்றி நின்றமணி கண்டனே
மேய வித்துயில் விலக்கணா மிழலை மேவிய விலக்கணா.
|
9 |
கஞ்சி யைக்குலவு கையரே கலக்க மாரமணர் கையரே
அஞ்ச வாதிலருள் செய்யநீ யணைந்தி டும்பரிசு செய்யநீ
வஞ்ச னேவரவும் வல்லையே மதித்தெ னைச்சிறிதும் வல்லையே
வெஞ்ச லின்றிவரு வித்தகா மிழலை சேரும்விறல் வித்தகா.
|
10 |
மேய செஞ்சடையின் அப்பனே மிழலை மேவியவெ னப்பனே
ஏயுமா செய விருப்பனே இசைந்த வாசெய விருப்பனே
காய வர்க்கசம் பந்தனே காழி ஞானசம் பந்தனே
வாயு ரைத்ததமிழ் பத்துமே வல்லவர்க் குமிவை பத்துமே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |
திருஞானசம்பந்தர் தேவாரம் |
மூன்றாம் திருமுறை |
3.119 திருவீழிமிழலை பண் - புறநீர்மை |
புள்ளித்தோ லாடை பூண்பது நாகம்
பூசுசாந் தம்பொடி நீறு
கொள்ளீத்தீ விளக்கு கூளிகள் கூட்டங்
காளியைக் குணஞ்செய்கூத் துடையோன்
அள்ளற் காராமை அகடு வான்மதியம்
ஏய்க்கமுட் டாழைக ளானை
வெள்ளைக்கொம் பீனும் விரிபொழில் வீழி
மிழலையா னெனவினை கெடுமே.
|
1 |
இசைந்தவா றடியா ரிடுதுவல் வானோர்
இழுகசந் தனத்திளங் கமலப்
பசும்பொன்வா சிகைமேற் பரப்புவாய் கரப்பாய்
பத்திசெய் யாதவர் பக்கல்
அசும்புபாய் கழனி யலர்கயன் முதலோ
டடுத்தரிந் தெடுத்தவான் சும்மை
விசும்புதூர்ப் பனபோல் விம்மிய வீழி
மிழலையா னெனவினை கெடுமே.
|
2 |
நிருத்தனா றங்கன் நீற்றன் நான்மறையன்
நீலமார் மிடற்றன்நெற் றிக்கண்
ஒருத்தன்மற் றெல்லா வுயிர்கட்கும் உயிராய்
யுளனிலன் கேடிலி யுமைகோன்
திருத்தமாய் நாளும் ஆடநீர்ப் பொய்கை
சிறியவர் அறிவினின் மிக்க
விருத்தரை யடிவீழ்ந் திடம்புகும் வீழி
மிழலையா னெனவினை கெடுமே.
|
3 |
தாங்கருங் காலந் தவிரவந் திருவர்
தம்மொடுங் கூடினா ரங்கம்
பாங்கினால் தரித்துப் பண்டுபோ லெல்லாம்
பண்ணிய கண்ணுதற் பரமர்
தேங்கொள்பூங் கமுகு தெங்கிளங் கொடிமாச்
செண்பகம் வண்பலா இலுப்பை
வேங்கைபூ மகிழால் வெயில்புகா வீழி
மிழலையா னெனவினை கெடுமே.
|
4 |
கூசுமா மயானங் கோயில்வா யிற்கண்
குடவயிற் றனசில பூதம்
பூசுமா சாந்தம் பூதிமெல் லோதி
பாதிநற் பொங்கர வரையோன்
வாசமாம் புன்னை மௌவல்செங் கழுநீர்
மலரணைந் தெழுந்தவான் தென்றல்
வீசுமாம் பொழில்தேன் துவலைசேர் வீழி
மிழலையா னெனவினை கெடுமே.
|
5 |
பாதியோர் மாதர் மாலுமோர் பாகர்
பங்கயத் தயனுமோர் பாலர்
ஆதியாய் நடுவாய் அந்தமாய் நின்ற
அடிகளார் அமரர்கட் கமரர்
போதுசேர் சென்னிப் புரூரவாப் பணிசெய்
பூசுரர் பூமகன் அனைய
வேதியர் வேதத் தொலியறா வீழி
மிழலையா னெனவினை கெடுமே.
|
6 |
தன்றவம் பெரிய சலந்தர னுடலந்
தடிந்தசக் கரமெனக் கருளென்
றன்றரி வழிபட் டிழிச்சிய விமானத்
திறையவன் பிறையணி சடையன்
நின்றநாட் காலை யிருந்தநாள் மாலை
கிடந்தமண் மேல்வரு கலியை
வென்றவே தியர்கள் விழாவறா வீழி
மிழலையா னெனவினை கெடுமே.
|
7 |
கடுத்தவா ளரக்கன் கைலையன் றெடுத்த
கரமுரஞ் சிரநெரிந் தலற
அடர்த்ததோர் விரலால் அஞ்செழுத் துரைக்க
அருளினன் தடமிகு நெடுவாள்
படித்தநான் மறைகேட் டிருந்தபைங் கிளிகள்
பதங்களை யோதப்பா டிருந்த
விடைக்குலம் பயிற்றும் விரிபொழில் வீழி
மிழலையா னெனவினை கெடுமே.
|
8 |
அளவிட லுற்ற அயனொடு மாலும்
அண்டமண் கெண்டியுங் காணா
முளையெரி யாய மூர்த்தியைத் தீர்த்த
முக்கண்எம் முதல்வனை முத்தைத்
தளையவிழ் கமலத் தவிசின்மேல் அன்னந்
தன்னிளம் பெடையொடும் புல்கி
விளைகதிர்க் கவரி வீசவீற் றிருக்கும்
மிழலையா னெனவினை கெடுமே.
|
9 |
கஞ்சிப்போ துடையார் கையிற்கோ சாரக்
கலதிகள் கட்டுரை விட்டு
அஞ்சித்தே விரிய எழுந்தநஞ் சதனை
யுண்டம ரர்க்கமு தருளி
இஞ்சிக்கே கதலிக் கனிவிழக் கமுகின்
குலையொடும் பழம்விழத் தெங்கின்
மிஞ்சுக்கே மஞ்சு சேர்பொழில் வீழி
மிழலையா னெனவினை கெடுமே.
|
10 |
வேந்தர்வந் திறைஞ்ச வேதியார் வீழி
மிழலையுள் விண்ணிழி விமானத்
தேய்ந்ததன் றேவி யோடுறை கின்ற
ஈசனை யெம்பெரு மானைத்
தோய்ந்தநீர்த் தோணி புரத்துறை மறையோன்
தூமொழி ஞானசம் பந்தன்
வாய்ந்தபா மாலை வாய்நவில் வாரை
வானவர் வழிபடு வாரே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |